Jul 27, 2011

தித்திக்கும் இளமை - ஒரு டக்கால்டி ரிப்போர்ட்

வணக்கம் நண்பர்களே!!! எல்லாரும் நல்லா இருக்கீங்களா? இன்றைய இடுகை தித்திக்கும் இளமை என்ற ஒரு உலக மகா காவியம் பற்றி. 'உனக்கு தான் படம் பிடிக்கலைல அப்புறம் எதுக்கு அதைப் பற்றி கேவலமாக எழுதி ஒரு இடுகையை ஒப்பேற்றுகிறாய்' எனும் நண்பர்களுக்கு எனது பதில் 'பிடிக்காத படம் மொக்கை படம் என்று எதுவுமே கிடையாது. படம் எடுக்கும் விதத்தில் எவ்வாறு கோட்டை விடுகிறார்கள் என்பதில் தான் படத்தின் வெற்றி இருக்கிறது. பலருக்கு இம்மாதிரி லோ-பட்ஜெட் மொக்கை படங்கள் தெரியாமலே போகலாம். இதனால் இப்படங்களில் சொல்லப்படும் சில நல்ல விஷயங்கள் மக்களிடம் சேராமல் போகின்றது. எதோ ராமருக்கு உதவிய அணில் கணக்காக என்னால் முடிந்த சிறு முயற்சியாக சில லோ-பட்ஜெட் படங்களைப் பற்றி எழுதி வருகிறேன்.' அந்த வரிசையில் இந்த இடுகையில் நாம் பார்க்கப் போகும் படம் தான் 'தித்திக்கும் இளமை'.

படம் பேரை கேட்டுட்டு அண்ணன் சி.பி கணக்கில் குஜால் ஆகுவோர் ஏமாற்றம் அடைவீர்கள். இந்த படம் பேரு துள்ளுவதோ இளமை இல்லை 'தித்திக்கும் இளமை'. அநேகமாக இந்த படம் 5 வருடங்கள் முன்னாலேயே தயாரிக்கப்பட்டு 'நிதி' யின் விதியால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆட்சி மாற்றத்திற்குப் பின் அலுத்துப் போயி வெளியிட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர்.

நடிகர்கள்- தினேஷ், அல்தாரா, நிஷா, தலைவாசல் விஜய், மன்சூர் அலிகான், செந்தில், நிழல்கள் ரவி, சந்தானபாரதி, அஜய் ரத்னம், விஜய் கிருஷ்ணராஜ், பயில்வான் ரங்கநாதன், பாத்திமா பாபு, லக்ஷா

இயக்கம் - சந்திர மோகன்
தயாரிப்பு - எஸ்.சுப்பிரமணியம்
இசை - கே.மனிஷ்

படத்தின் துவக்கத்திலேயே பாதி காட்சிகளை ஊகித்துவிட முடியும். பால்காரர் காமெடியன் செந்தில்-சி.ஆர் சரஸ்வதி தம்பதியின் மகன், ஐயர் ஆத்து சந்தானபாரதியின் மகன், பணக்கார நிழல்கள் ரவியின் மகள், மலம் அள்ளும் "ஸ்டிக் இல்ல ஸ்டிக் மாதிரி" புகழ் நடிகரின் மகன் என ஒரு இளமைப் பட்டாளத்தின் வாலிபக் கூத்து எப்படி அவர்களுக்கு ஆபத்தாக முடிகின்றது என்று சொல்லும் படம்.

வழக்கம் போலவே தன் பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர், அவர்களை ஏமாற்றி, தானும் ஏமாறுவது தெரியாமல் ஊர் சுற்றும் அவர்களின் பிள்ளைகள், அவர்கள் வாலிப வயதில் செய்கின்ற அநியாய தவறுகளுக்கு எப்படி யாரால் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதே கதை.

இதில் ஒரே அறையில் வசித்து, 'என் புருஷனும் கச்சேரிக்கு போகிறான்' என்ற கதையை கல்லூரிக்கு செல்லும் மூன்று நண்பர்கள் மற்றும் அவர்களுடன் கல்லூரியில் படிக்கும் நாயகி ஆகியோரே கதையின் மையக் கதாப்பாத்திரங்கள். யாரையோ தேடி வந்து, வீடு தேடி அலைந்து பின்னர் இந்த மூன்று நண்பர்களின் அறைகளில் தங்கும் வைப் பேச முடியாத கேரக்டரில் ஒருவர். அவர் தான் படத்தின் உண்மையான ஹீரோ. மூன்று நண்பர்களில் ஒருவன் பால்காரராக வரும் செந்தில்-சி.ஆர்.சரஸ்வதி தம்பதியின் மகன்.மற்றொருவர் மலம் அள்ளும் 'ஸ்டிக் இல்ல ஸ்டிக் மாதிரி' வசன புகழ் நடிகரின் மகன். இன்னொருவன் ஆச்சார ப்ராமண குடும்பத்தில் பிறந்த சந்தானபாரதியின் மகன். ஆனால் வழக்கம் போல கூடப் படிக்கும் நாயகி மட்டும் செல்வச் சீமான் நிழல்கல் ரவியின் மகள்.இவர்கள் அனைவரும் கல்லூரி காலத்துக்கே உரிய இளமைத் துள்ளலில் இருக்க, இவர்களின் பெற்றோர் இவர்களை கஷ்டப்பட்டு படிக்க வைப்பதை மறந்து, அறையில் இருக்கும் அந்த மூன்று நண்பர்களும் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் ஊதாரியாக சுற்றுவதோடு மட்டும் இல்லாமல், வீட்டில் பெற்றோரை ஏமாற்றி காசு பிடுங்கி, மது,மாது என்று சுற்றுகிறார்கள்.

படத்தின் முதல் காட்சியிலேயே சந்தானபாரதியிடம் அவர் மனைவி,' ஏன்னா இன்னிக்கு அவனுக்கு பிறந்தநாள், நாம பகவான் கிட்ட வேண்டியபடியே விரதம் இருப்பனோல்யோ?' என கேட்க, 'போடி அவன் என் பையன்டி..அதெல்லாம் கரெக்டா இருப்பான்..நீ போட்டு குழப்பிக்காதே' என்று சந்தானபாரதி சொன்னவுடனேயே கட் பண்ணி ஒப்பன் பண்ண நம்ம ஹீரோ அங்கே தண்ணி அடிக்கும் காட்சி வருகிறது. அதுவும் ஒரு காட்சியில் கையில் காசு இல்லை என்று ஒருவன் சொல்ல இன்னொருவன், 'நம்ம மெஸ்ல வேலை பார்க்குறவன் இந்த நம்பரை கொடுத்தான். நீ நேரா அந்த வீட்டுக்கு போ, மெஸ் பேர சொல்லு...அந்த வீட்டு ஆன்ட்டி உன்னை உள்ளே கூப்பிடுவாங்க..போயி வேலைய முடிச்சுடு' என்பான். 'கரும்பு தின்ன கூலி வேறயா மச்சி' என்று அவனும் அதே போல செல்ல, ஒரு ஆன்ட்டியுடன் உடனே ஒரு சீன் பாட்டு.

அதுக்கப்புறம் வழக்கம் போல கல்லூரி சுற்றுலா செல்கின்றனர். அங்கே ஆளுக்கொரு பிகரை உஷார் பண்ணுகின்றனர். பிறகு ஒவ்வொருவரு ஜோடிக்கும் இடையே நடக்கும் காமக் காட்சிகள். ஹீரோயின் கற்பம் தரிக்கிறாள். டாக்டரிடம் சென்று யதார்த்தமாக கற்பத்தை கலைக்க சொல்கிறாள்.

ஊதாரிகளைப் பற்றி சொல்லும் இப்படி போகிற ஊதாறிக் கதையில், இந்த மூன்று பேரும் அனுபவிக்கும் சுகம் போதாமல் அந்த மெஸ்ஸில் வேலை பார்ப்பவன் திருடும் செல் போன்களை வாங்கி அதில் ஏதேனும் பெண்கள் படம் இருந்தால் அதை மார்பிங் செய்து ஆபாச படங்களாக நெட்டில் ஏற்றி சமூகத்துக்கு சேவை செய்ய, இதில் இவர்கள் ரூமில் வந்து தாங்கும் வாய் பேச முடியாத நபரின் தங்கை படமும் அவ்வாறு வர, மனமுடைந்த தங்கை தீ வைத்து தற்கொலை செய்துவிட, அவர்களை பழிவாங்க வருபவர் தான் அந்த வாய் பேச முடியாதவர். பலர் போல மிமிக்ரி செய்யும் தனது தங்கைக்கு நிச்சயம் செய்தவரின் உதவியுடன் திட்டம் போட்டு ஒவ்வொருவரையும் எரித்துக் கொலை செய்கிறார். இறுதியில் போலீசில் சரணடைந்து, சிட்டிசன் பட ரேஞ்சில் கோர்ட் காட்சிகள் வர, சமூகத்துக்கு செல்போனால் ஏற்படும் சில அபாயங்களை கருத்து சொல்கிறார். அதையும் மீறி நீதிமன்றம் தண்டனையை வழங்க தானும் அங்கேயே தற்கொலை செய்து தன் தங்கை சென்ற இடத்துக்கே போய்விடுகிறார்.

நாமும் கிட்டத்தட்ட பட முடிவில் நடைபிணமாகிறோம். போலீசாக மன்சூர் அலிகான். பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார். அதுவும் ரவுடிகளிடம் அவர் பேசும் பாடி லாங்குவேஜ் சூப்பர். தலைவாசல் விஜய் என்ற ஒரு நல்ல நடிகர் ஒரு மொக்கை கானா பாட்டுக்கு மட்டும் முமைத்கான் போல பயன்படுத்தப்பட்டிருக்கிறார். மேலும் வக்கீலாக வரும் பாத்திமா பாபு, மற்றும் நாயகியின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி ஆகியோர் வரும்போது மட்டும் திரைப்படம் பார்க்கின்ற உணர்வு வருகின்றது.மற்ற நேரங்களில் எதோ மெகா சீரியல் போல இருக்கிறது. வாழ்க்கைல ரொம்ப போர் அடிக்குது, எல்லா படமும் பார்த்துட்டேன், என்ன பண்றதுன்னு தெரியலைன்னு சொல்றவங்க இந்த படத்தை பாருங்க. வெகு விரைவில் இதே போல இன்னொரு படத்துடன் வருகிறேன். நன்றி!

13 comments:

மதுரை சரவணன் said...

nalla vimarsanam.. sinimaa niraiya paarpeerkal pol therikirathu...vaalththkkal

Prabu Krishna said...

இது ஏதோ கொலை மிரட்டல் மாதிரி இருக்கு.

Unknown said...

விமர்சனம் நல்லா இருக்குங்க மாப்ள...இந்த அளவுக்கு தைரியம் இல்ல படம் பாக்க ஹிஹி!

rajamelaiyur said...

கலக்கல்

செங்கோவி said...

நானும் கில்மா அடம்னு தான் நினைச்சேன்..கொல்மா படமா? இதெல்லாம் எப்படி பாஸ் பார்க்கிறீங்க?

சென்னை பித்தன் said...

//வெகு விரைவில் இதே போல இன்னொரு படத்துடன் வருகிறேன். நன்றி!//
காக்க காக்க கனகவேல் காக்க!

சக்தி கல்வி மையம் said...

ரைட்டு..
என்னை ஞாபகம் இருக்கா?

டக்கால்டி said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ரைட்டு..
என்னை ஞாபகம் இருக்கா?//

Irukku Thala...Konjam Busy ah irukken...Thats y...

டக்கால்டி said...

Thanks friends for the visit

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

பலே பிரபு said...
இது ஏதோ கொலை மிரட்டல் மாதிரி இருக்கு.
suoer comment

நிரூபன் said...

வணக்கம் நண்பர்களே!!! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?//

நாம நல்லா இருக்கிறோம், இம்புட்டு நாளா எங்கே ஐயா போனீர்?

நிரூபன் said...

விமர்சனத்தி, உங்களின் தனி ஸ்டைலினையும், காத்திரமான படம் பற்றிய பார்வையினையும் பதிவு செய்திருக்கிறீங்க.
இருங்க..டைம் இருக்கும் போது இந்தப் படத்தைப் பார்க்க முயற்சி செய்கிறேன்.ன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விமர்சனம் சூப்பர் பார்ட்னர், படம்தான் படுத்திருச்சு போல...